செண்பகனூர்...கொடைக்கானலின் அருகே உள்ள அழகிய சிற்றூர், பச்சை சேலை உடுத்திய பூமிப்பெண்ணுக்கு வெண்ணிற மேக தேவதைகள் சாமரம் வீசுவதும்... அந்த பருவ மங்கைக்கு பன்னீர் பூக்களாய் சாரல் மழையை அவ்வப்போது தெளிப்பதும் அங்கு அன்றாடம் நடைபெறும் அதிசயம்.
அந்த சாரல் மழை அருவியாய் பெருகி.. இளம் பெண்ணின் தாவணியாய் காற்றில் பறக்க... அதைப் பார்ப்பது மனதிற்கு மட்டும் அல்ல கண்களுக்கும் விருந்தாய் இருக்கும்.
அதன் விளைவோ என்னவோ அங்கு பசுமை எங்கும் தழைத்தும் கொழுத்தும் பழங்களாய் பழுத்தும் அந்த இடம் முழுவதும் பரவி இருந்தது.
மேகக் காதலியை முத்தமிட துடித்த மலைக் காதலன்கள் தன்னிடம் நெருங்கும்
காற்று தூதுவனிடம் மேகக் காதலியை தன்னிடம் தள்ளி விட வேண்டுமாறு அதன் காதில் கிசுகிசுப்பதும்....
மேகக் காதலிகளோ காற்றின் வேகத்திற்கு ஏற்ப மேலே செல்வதும் கீழே இறங்குவதுமாய் அங்கும் இங்கும் அலைபாய்ந்து மழைக் காதலன்களுக்கு கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருப்பதும்...
புலராத பொழுதில் மலராத மொட்டுக்கள்.. ஆதவனின் அணைப்பை எதிர்பார்த்து.. பனித்துளியை கண்ணீர்த்துளியாய் வடித்து அதன் வரவை எதிர்பாக்கும் அந்த இளம் காலைப் பொழுதில்..
'அருண் .... அருண் .... இன்னுமா தூங்கிட்டு இருக்க..' அக்கா முத்துப்பேச்சி அவனை எழுப்பிக் கொண்டிருந்தாள்.
அருண்... இருபத்தேழு வயது.... மாநிறமான நிறம்.. கூரிய விழிகள்... உதட்டோரம் எப்பொழுதும் புன்னகை தவழ்ந்திருக்கும் உதடுகள்.. ஒல்லியான தேகம் . கூர்மையான மூக்கு... இரண்டாகப் பிளந்த தாடை... கலைந்த தலை... பார்ப்பதற்கு சூர்யாவில் பாதியும்... அஜித்தில் பாதியும் கலந்த கலவையாய் இருந்தான்.. உயரம் ஐந்துக்கு ஐந்து அடி ... அதிசியமாய் முழங்காலைத் தொடும் நீண்ட கைகளுடன் விரல்களும் நீளமாய்... வயலில் வெயிலிலும் உழைத்து உழைத்து உடம்பெல்லாம் கறுத்து இருந்தது..
அருணுக்கு தாய் தந்தை இல்லை... அவனின் சொந்த ஊர் பூம்பாறை... செண்பகனூரிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மற்றொரு அழகிய சிற்றூர்., அக்காவிற்கு திருமணம் ஆகும் பொழுதே அப்பா இல்லை, தாயே தன மகளை தனது தம்பியான ராமையா மாமாவிற்கு கட்டி கொடுத்து ... சில மாதங்களிலே அவரும் இறந்து விட ... தனித்து விடப்பட்ட அருண்.. தன அக்கா வீட்டிலே நிரந்தரமாய்த் தங்கிவிட்டன... அப்பொழுது அவனுக்கு வயது பத்து...
பத்து வயதிலிருந்தே தன் மாமாவை அப்பாவாகவும்.... அக்காவை அன்னையாகவும் நினைத்து.. அங்கேயே வளர்ந்து வந்தான் .... அவர்களும் அவனிடம் அன்பையும் பாசத்தையும் பொழிந்து அவனை பெறாத பிள்ளையாகவே வளர்த்து வந்தனர்.
சிறுவயதில் இருந்தே மாமாவுடன் விவசாயத்தில் ஈடுபட்டதாலோ என்னவோ.. அவனுக்கு விவசாய படிப்பு படிக்க வேண்டும் என்று ஆசை பிறந்து... பிஎஸ்சி வேளாண்மை படிப்பை கோயம்பத்தூரில் உள்ள விவசாயக் கல்லூரில் முடித்து... அரசாங்க வேலை கிடைக்கும் வரை ஊர் சுற்றாமல்... தன் படிப்பின் அறிவை மாமாவின் வயல்களில் உபயோகப்படுத்தி... நல்ல விளைச்சளைக் காண தன்னால் முயன்ற அளவு புது புது உக்திகளை கையாண்டு வருகிறான்.
அக்கா முத்து பேச்சியின் குரலைக் கேட்டு விழித்தவன்... கண்களை கசக்கி முகத்தை தேய்த்தபடி எழுந்தான்... முத்து பேச்சியோ தன புடைவைத் தலைப்பால் முகத்தை துடைத்த படியே எதிரில் வர ...
அக்கா முத்து பேச்சிக்கு ஒரே மகள், ஜெயசுதா... அருணுக்கும் அவளுக்கும் ஏழு வயது வித்தியாசம், தற்சமயம் சென்னை கிண்டி இன்ஜினியரிங் கல்லூரியில் பொறியியல் படிப்பை படித்து கொண்டு வருகிறாள்.
முத்து பேச்சிக்கு தன மகளை அவ்வளவு தூரம் அனுப்பி படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லைதான், இருந்தாலும் தன கணவனின் விருப்படியும் மகளின் ஆசைப்படியும் படிக்க அனுமதித்தாள்.
'மாமா... காலையிலே எழுந்து வெளியே பேசிட்டிருக்கார்.. நீ என்னடானா இன்னும் தூங்கிட்டே இருக்க..'
மாமா என்றாலே அவனுக்கு ஒரு பயம் கலந்த மரியாதை எப்பவும் உண்டு, கருத்த உருவம், கடா மீசையுடன், அஜானுபாவான உடல்வாகுடன் அய்யனார் கோவில் சிலை மாதிரி இருப்பார், முதன் முதலில் யார் அவரைப் பார்த்தாலும் பயந்து தான் போவார்கள், பார்பதற்கு தான் முரடு மாதிரி இருப்பாரே ஒழியே, பலாப்பழம் போல அவரிடம் பாசம், அன்பு, கருணையும் உள்ளது என்பது அவருடன் பழகியவருக்கு மட்டும் தான் தெரியும்.
'நைட் கொஞ்சம் அதிக நேரம் முழிச்சிட்டு இருந்தேன்.... அதனால தான் கொஞ்சம் கண்ண அசந்திட்டேன்'
'சரி சரி .. எந்திருச்சி ... மூஞ்ச கழிவிட்டு வாடா . காபி தரேன்...'
வெளியில் பனிப் பொழிவினால் பத்தடி தூரத்திற்கு மேல் என்ன இருக்கிறது என்பதே தெரியவில்லை... மேகம் தரை இறங்கி பூமியில் கால் பதித்து ஒரு போர்வை போல வியாபித்து இருந்தது.
உள்ளே இருந்த ஹாலில் மாமா ஊர்ப் பெரியவர்களுடன் பேசிக் கொண்டிருக்க...
அவருக்கு சத்தம் கேட்காத மாதிரி பூனை நடை நடந்து கொல்லைப் புறம் சென்று.. முகத்தை அலம்பி திரும்பவும் .. அக்கா காபியை எதிரில் கொண்டு வரவும் சரியாக இருந்தது ...
காபி என்று தான் பெயர் ஒழிய அதில் சர்க்கரையும் பாலும் கலக்காமல் சுக்கும் கருபட்டியும் கலந்த சுடுநீர் என்று தான் சொல்லவேண்டும், ஊரைச் சுற்றி காபி எஸ்டேட் , டீ எஸ்டேட் இருந்தாலும் .... குடிப்பதற்கு கிடைப்பது என்னவோ கருப்பட்டி சுடுநீர் தான், தொன்று தொட்டு சாப்பிட்டு சாப்பிட்டே அவனுக்கும் அது பழகிவிட்டது.
'இந்த வருஷம் நடக்கிற திருவிழாவா... போன வருஷம் விட சிறப்பா நடத்தணும்..
அது தான் எங்களோட ஆசை'
ஊர் நாட்டாமை மாமாவிடம் சொல்ல...
அந்த ஊரில் முந்நூறு வீடுகள் இருக்கும், அவர்களுக்கு முக்கிய தொழிலே விவசாயம் தான், பெண்கள் காபி எஸ்டேட்டிலும் , தேயிலை தோட்டத்திலும் வேலை செய்ய, மற்றவர்களோ கொடைக்கானல் ஹோட்டல்களில் வேலை செய்து வருகின்றனர்.
'அதுக்கென்ன... நடத்தி வச்சா போச்சு.... கொடி நட நாளெல்லாம் குறிச்சாச்சா..'
மாமா, அந்த கிராமத்திலே ஒரு முக்கியமான புள்ளி, நிலபுலன்களுடன் வசதியாக இருப்பதாலும், ஒவ்வொரு வருடம் விழாவிற்கு அதிகமான் நன்கொடை கொடுப்பதாலும், ஊர் பெரிய மனிதர்கள் அவரிடம் பணம் வசூல் செய்யவும், விழாவை நடத்த ஆலோசனை பெறவும் வருவது கடந்த சில வருடங்களாக வழக்கமாக நடைபெறும் நிகழ்வு தான்..
'வர்ர விசாழக்கிழமை கொடி நாட்டனும் . அதுக்கப்புறம் ஊர விட்டு யாரும் வெளியூர் போகக்கூடாது... ஊருக்கு உள்ளே வர்றவங்களும் விழா முடியற வரைக்கும் வெளியூருக்கு போகாம இருக்கணும்'
கோவில் பூசாரி இதைச் சொல்ல.. அனைவரும் அவர் கருத்தை ஆமோதித்தனர் ....
அக்கா முத்து பேச்சிக்கு மனதில் ஒரு ஆசை, தன மகளை தன தம்பிக்கு திருமணம் செய்து வைத்து விடவேண்டும் என்று, இதுவரைக்கும் தம்பியிடம் இதைப்பற்றி அவள் பேசியதில்லை, மகளின் படிப்பு முடியட்டும் என்று தான் காத்திருக்கிறாள்.
அருணின் திருமண ஆசையோ வேறுவிதமாக இருந்தது, அந்த ஆசை
விசித்திரமாகவும் இதுவரை கேள்வி படாத ஆசையாகும் இருந்தது.
அது என்ன.....